யாருக்காகவும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் போட்டியானாலும் சரி, வெளிநாட்டில் நடக்கும் போட்டிகள் ஆனாலும் சரி விராட் கோலி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6 ஆம் தேதி முதல் போட்டி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் அனுபவ வீரர்களான வார்னர், ஸ்மித் ஆகியோர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் அனைவரது கவனமும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீதே பரவியிருக்கிறது.
இந்நிலையில் யாருக்காகவும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “ அணியின் வெற்றிக்காக என்னால் எவ்வளவு முடியுமோ அதனை 100 சதவீதம் மைதானத்தில் சிறப்பாகவே கொடுப்பேன். அதனை தவிர யாருக்காகவும், எதையும் நிரூபிக்கத் தேவையில்லை. விளையாட்டிற்கு வந்த புதிதில் வேண்டுமானால் கேரியர் முக்கியம் என நான் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது எல்லாமே எந்தச் சூழலிலும் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடுகின்ற வெற்றிக்கான ஆட்டம்தான். உள்நாட்டில் ஆடுவதற்கும், வெளிநாட்டில் ஆடுவதற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசத்தை உணரவில்லை. விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும், ஒவ்வொரு டூரிலும் எதையாவது கற்றுக் கொண்டே இருக்கிறோம்.” என கூறியுள்ளார்.