பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் இப்போது நடந்து வருகிறது. இந்த போட்டி முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’இப்போது நடக்கும் போட்டி முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறேன். அடுத்த வருடம் நடக்கும் உலகக் கோப்பை போட்டியை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாகிஸ்தானுக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். அணியை வழி நடத்தும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருந்தது.
இதனால் பெருமைகொள்கிறேன். எனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி. அடுத்து வரும் தொடர்களில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.
முகமது ஹபீஸ் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3644 ரன்கள் எடுத்துள்ளார். 54 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.