'எனது டாப்-5 சதங்களில் அடிலெய்டு சதமும் ஒன்று' இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அபாரமாக ஆடிய புஜாரா சதம் அடித்தார். அவரது ஆட்டத்தால் இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. இது அவருக்கு 16 வது சதம். அவர் 123 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ரோகித் சர்மா 37 ரன்களும் ரிஷாப், அஸ்வின் தலா 25 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹசல்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ், லியான், தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். சதம் அடித்த புஜாராவை சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், லட்சுமண் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா, ’’முதல் இன்னிங்ஸில் இந்திய அணி எடுத்திருப்பது கவுரமான ஸ்கோர்தான். பந்து நன்றாக சுழன்று திரும்புகிறது. முதல் இரண்டு பகுதியில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்று உணர்ந்தேன். டிவியில் பார்க்கும்போது எளிதாக இருக்கும். ஆனால், ஆடுகளம் இரண்டு விதமாக இருந்தது. எனது இந்த அனுபவத்தை இந்திய பந்துவீச்சாளர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
இதுபோன்ற ஆடுகளங்களில் பொறுமையாக நின்று சாதகமாக வரும் பந்துகளை மட்டும் அடிக்க வேண்டும். தொடக்க ஆட்டக்காரர்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். அடுத்த இன்னிங்சில் நன்றாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன். ‘இது எனது சிறந்த ஆட்டங்களில் ஒன்று’ என்று சக வீரர்கள் கூறினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது டாப்-5 இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று’ என்றார்.
புஜாரா 95 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்களின் பட்டியலில் 12 வது வீரராக இணைந்தார். 65-வது டெஸ்டில் ஆடும் புஜாரா 108–வது இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியுள்ளார்.