ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது போட்டி அடிலெய்டில் நேற்றுத் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் முதல் நாளில் 9 விக்கெட்டுக்கு 250 எடுத்திருந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் அதிகப்பட்சமாக 123 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 37 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹசல்வுட், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே முகமது ஷமியின் விக்கெட்டை சாய்த்தார் ஹசல்வுட். இதையடுத்து 250 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பின்னர் ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆரோன் பின்சும் அறிமுக வீரர் மார்க்கஸ் ஹாரிஸூம் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பின்ச் விக்கெட்டை சாய்த்தார் இஷாந்த் சர்மா. அவர், ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து உஸ்மான் கவாஜா, ஹாரிஸூடன் இணைந்தார்.
இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். அவர்கள் இரண்டு பேரின் விக்கெட்டையும் அஸ்வின் எடுத்தார். பின்னர் வந்த மார்ஷூம் அஸ்வின் சுழலில் போல்டாகி பெவிலியன் திரும்ப, ஹேண்ட்ஸ் கோம்பும் ஹெட்டும் ஆடி வந்தனர். ஹேண்ட்ஸ்கோம்ப் (34) விக்கெட்டை பும்ரா தூக்க, 120 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். அவர் வெறும் 5 ரன்களில் வெளியேறினார்.
11.40 மணி நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. டிராவிஸ் ஹெட் 39 ரன்களுடனும் கம்மின்ஸ் 25 ரன்களுடன் ஆடி வருகின்றனர். இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டை சாய்த்தார். இஷாந்த் சர்மா 2 விக்கெட்டையும் பும்ரா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.