ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே வார்த்தை போர்களுக்கும், கலாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. தகாத வார்த்தையில் கூட ஆஸி வீரர்கள் இந்திய வீரர்களை திட்டிய சம்பங்களும் கடந்த காலங்களில் நடந்து இருக்கிறது. ஆனால் எப்போது இந்திய அணிக்கு கேப்டனாக கோலி பொறுப்பேற்றாரோ, அப்போதிலிருந்து நம் வீரர்களும் ஆஸி வீரர்களின் ஆக்ரோஷத்துக்கு ஈடாக கெத்து காட்டி வருகின்றனர். இப்போது ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இதன் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸி பந்துவீச்சாளர் கம்மின்ஸ், இந்திய வீரர் ரிஷப் பன்ட் அருகே சென்று ஏதோ சில வார்த்தைகளில் கூறினார். ஆனால் ரிஷப் பன்ட் அமைதியாக சென்று விட்டார். இந்திய அணியும் இரண்டாவது நாளின் முதல் பந்திலேயே ஷமி அவுட்டானதும் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஆஸி அணி தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தொடங்கினர். ஆனால், அதில் உஸ்மான் கவாஜா மட்டும் ஓரளவுக்கு நின்று ஆட முயற்சி செய்தார்.
தோனி பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது அமைதியாகவே இருப்பார். ஸ்லெட்ஜிங் செய்யும் பழக்கமெல்லாம் தோனிக்கு இருந்ததில்லை. ஆனால், ரிஷப் பன்ட் அதற்கு அப்படியே "ஆப்போசிட்". இந்திய பவுலர்களை ஊக்கப்படுத்தும்விதமாக கத்திக்கொண்டே இருந்தார் பன்ட். அப்படிதான் உஸ்மான் கவாஜாவை அவுட் செய்ய முயன்றுக்கொண்டு இருந்தார் அஷ்வின். அப்போது ரிஷப் பன்ட் "இந்த டீம்ல யாரும் புஜாரா இல்ல" என கலாய்த்தார். ரிஷப் பன்ட் சொன்னது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியிருந்தது.
இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 க்கு ஆல் அவுட்டானது. இந்திய வீரர்கள் பலரும் விரைவாக ஆட்டமிழக்க. இறுதி வரை பொறுமையாக விளையாடியபுஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் அதிகப்பட்சமாக 123 ரன்களும் ரோகித் சர்மா 37 ரன்களும் எடுத்தனர். புஜாராவின் இந்த பொறுப்பான ஆட்டம் குறித்து பல கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர். புஜாரா களமிறங்கிவிட்டால் அவரை அவுட் ஆக்கவுது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிரடியாக விளையாடாவிட்டாலும், அவுட் ஆகாமல் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்பார்.
இப்போதுள்ள ஆஸி அணியில் இப்படிப்பட்ட பேட்ஸ்மேன்கள் இல்லை. அதனால்தான் புஜாராவை குறிப்பிட்டு ஆஸி பேட்ஸ்மேனை கேலி செய்தார் ரிஷப் பன்ட். இதனால் ஆட்டக்களம் இப்போது சூடு பிடித்திருக்கிறது. மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவை விட 15 ரன்கள் குறைவாக எடுத்து ஆஸி அணி 235 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.