ஆஸ்திரேலியா- இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி அடிலெய்டில் தொடங்கி நடந்து வருகிறது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 எடுத்திருந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் அதிகப்பட்சமாக 123 ரன்களும் ரோகித் சர்மா 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹசல்வுட் 3 விக்கெட்டையும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆரோன் பின்சும் ஹாரிஸூம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பின்ச் விக்கெட்டை சாய்த்தார் இஷாந்த் சர்மா. ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே ஆட்டமிழந்து வெளியேறினார் பின்ச். அடுத்து உஸ்மான் கவாஜா, ஹாரிஸூடன் இணைந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். அவர்களின் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். பின்னர் வந்த மார்ஷூம் அஸ்வின் சுழலில் போல்டாகி பெவிலியன் திரும்ப, ஹேண்ட்ஸ்கோம்பும் ஹெட்டும் ஆடி வந்தனர்.
ஹேண்ட்ஸ்கோம்ப் (34) விக்கெட்டை பும்ரா தூக்க, 120 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். அவர் வெறும் 5 ரன்களில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் ஹெட் நிலைத்து நின்று ஆடினார். அவர் அரை சதம் கடந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கம்மின்ஸ் 10 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார்
நேற்றைய ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே 15 ரன்கள் எடுத்திருந்த ஸ்டார்க், பும்ரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தடைபட்டது.
டிராவிஸ் ஹெட் 66 ரன்களுடனும் லியானும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.