புவனேஷ்வரில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.
14வது ஹாக்கி உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகளை வரிசைப்படி நான்கு, நான்காக பிரித்து அதனை ஏ,பி,சி,டி என நான்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு விளையாடி வருகின்றன.
சி பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி முக்கியத்துவம் மிகுந்த கடைசி லீக் போட்டியில் கனடா அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பு மேலோங்கிய இந்தப்போட்டியில் இந்திய அணி ஐந்துக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.
இந்தப்போட்டியின் முடிவையடுத்து சி பிரிவில் இந்தியாவும், பெல்ஜியமும் தலா 7 புள்ளிகளுடன் சமநிலையை எட்டின. இதனையடுத்து அதிக கோல்கள் அடித்ததன் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது.