ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, அடிலெய்டில் நடந்து வருகிறது.
இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 எடுத்திருந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் அதிகப்பட்சமாக 123 ரன்களும் ரோகித் சர்மா 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹசல்வுட் 3 விக்கெட்டையும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா 2 விக்கெட் டை வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே 15 ரன்கள் எடுத்திருந்த ஸ்டார்க் ஆட்டமிழந்தார். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தடைபட்டது. அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை அப்போது எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 66 ரன்களுடனும் லியானும் களத்தில் இருந்தனர். மழை நின்றதும் போட்டி தொடர்ந்தது.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹெட், 72 ரன்னில் முகமது ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஹசல்வுட் விக்கெட்டையும் ஷமி சாய்த்தார். இதனால் அந்த அணி 235 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாடாத கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் இதில் சிறப்பாக ஆடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், முரளி விஜய், 18 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் புஜாரா வந்தார்.
வேகமாக ஆடத் தொடங்கிய கே.எல்.ராகுல் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஹசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் விராத் வந்தார். கடந்த இன்னிங்ஸில் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்த விராத், நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்தார்.
இருந்தாலும் லியான் சுழலில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார். அவர் 104 பந்துகளை சந்தித்து 34 ரன்களை எடுத்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
புஜாரா 40 ரன்னுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடர்கிறது.