ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி 307 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுலும், முரளி விஜய்யும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுலும் ஆட்டமிழந்தார்.
பின்னர் புஜாராவும், கேப்டன் விராத் கோலியும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடி ரன் சேர்த்தனர். 34 ரன் எடுத்திருந்த நிலையில் விராத் கோலி அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்திருந்தது. இதன் மூலம் 166 ரன் முன்னிலை பெற்றிருந்தது. புஜாரா 40 ரன்னுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. மிகவும் பொறுமையாக ஆடிய புஜாரா 70 ரன் எடுத்திருந்த நிலையில் லியான் பந்துவீச்சில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துர் ரோகித் சர்மா வந்தார். அவரையும் லியான் தன் சுழலில் சிக்க வைத்தார். பின்னர் வந்த ரிஷாப் அதிரடியாக ஆடினார். அவரையும் லியான் விட்டுவைக்கவில்லை. 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ரிஷாப் வெளியேறினார்.
அடுத்து வந்த அஸ்வினும் நிலைத்து நிற்கவில்லை. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ரஹானே (70 ரன்) விக்கெட்டையும் லியான் சாய்க்க, அடுத்த வந்த இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் சரண்டர் ஆனார்கள். இதையடுத்து இந்திய அணி 207 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் லியான் 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி 323 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.