ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றியில் இளவரசனே புஜாராதான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடேலைட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் புஜாரா 123 (146) ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணியில் ஜோஸ் 3 விக்கெட் மற்றும் கும்மின்ஸ், ஸ்டார்க், லைமான் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணி 307 எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் புஜாரா 71 ரன்கள் மற்றும் ரஹானே 70 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய லையான் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் ஆல் அவுட் ஆகி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது.
பின்னர் பேசிய விராட் கோலி “ஒரு போட்டி என்பது ஏற்றம் மற்றும் தாழ்வு என்ற இரண்டையும் கொண்டது என்பதை இந்த டெஸ்ட் உணர்த்தியது. அதேசமயம் போட்டி எப்படி ஒரு நிலையில் சென்றுகொண்டிருந்தாலும் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக போராடினர். இருந்தாலும் நாங்கள் எங்கள் திட்டத்தை தெளிவாக வகுத்து இறுதி விக்கெட்டை கைப்பற்றினோம். போட்டியின் போது நான் கூலாக இருக்கிறேன் என்று சொல்லமுடியாத மனநிலையில் இருந்தேன். இருந்தாலும் அதை நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
இறுதி ஓவரை வீசும்போது பும்ரா ஆவேசப்பட்டார். ஆனால் நான் அவரிடம் சொன்னது ‘ரிலாக்ஸ்’ ஆகு என்பதை மட்டும்தான். 2 இன்னிங்கிஸிலும் சேர்த்து 20 விக்கெட்டுகளை 4 பந்துவீச்சாளர்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். அவர்களை நினைத்து உண்மையிலேயே பெரிய பெருமை கொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தின் இளவரசனே புஜாராதான். முதல் இன்னிங்ஸில் அணியே சரிந்தபோது, அதை தடுத்து தூக்கியது அவர்தான். ரஹானேவும் சிறப்பாகதான் விளையாடினார்” எனக் கூறினார்.