மகேந்திர சிங் தோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.
அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், 11 கேட்ச்களைப் பிடித்து உலக சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேக் ரஸல், 1995ம் ஆண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியிலும், தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 2013-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 11 கேட்ச்களை பிடித்திருந்தனர். அதை சமன் செய்துள்ளார் ரிஷாப். இந்திய வீரர் சாஹா 10 கேட்ச்களை பிடித்துள்ளார். தோனி 6 கேட்ச்களை பிடித்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு ரிஷாப் பன்ட் அளித்துள்ள பேட்டியில், ’தோனியின் பாதிப்புதான் இதற்கு காரணம். அவர் இந்திய நாட்டின் ஹீரோ. அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் அருகில் இருந்தால் அதிக நம்பிக்கையுடன் இருப்பேன். கிரிக்கெட் தொடர்பாக ஏதாவது சந்தேகம், பிரச்னை என்றால் உடனடியாக அவரிடம் சொல்வேன். நிவர்த்தியாகிவிடும்.
விக்கெட் கீப்பராகவும் வீரராகவும் அவர்தான், அழுத்தமான சூழல்களில் பொறுமையாக ஆடுவதைக் கற்றுக்கொடுத்தவர். அமைதியாக இருந்து, ஆட்டத்தில் கவனம் செலுத்தி நூறு சதவிகித ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். 11 கேட்ச் பிடித்ததை ரெக்கார்ட் என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. எப்போதும் சாதனைகளை பற்றி அதிகம் யோசிப்பதில்லை’’ என்றார் .