ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா இன்று விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்தது. அந்த அணியில் ஷான் மார்ஸ் 131 (123) ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மேக்ஸ்வெல் 48 (37), மார்கஸ் 29 (36), பீட்டர் 20 (22) மற்றும் உஸ்மான் 21 (23) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஸ்குமார் 4 விக்கெட்களையும், முகமது சமி 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.
இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். அவர் 104 (112) என்ற ரன்களில் வெளியேற, முன்னாள் கேப்டன் தோனி பொறுப்புடன் நின்று, இலக்கை எதிர்கொண்டார். அத்துடன் அரை சதம் அடித்து ஆட்டத்தின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் இந்திய 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை த்ரில்லாக வென்றது. இதன்மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது.