பெரிய தவறுகளை செய்தவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யாவை மட்டும் நீக்கியது ஏன் என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் அதிரடியாக பிசிசிஐ-யால் நீக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். இருவர் மீதான விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணையைப் பொருத்துதான் இருவரும் அணியில் சேர்க்கப்படுவார்கள்.
இந்நிலையில், பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான நடவடிக்கை குறித்து தடைவிதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சர்ச்சை குறித்து பேசுகையில், “அவர்கள் செய்தது தவறுதான். பாண்ட்யா, ராகுல் தவறாக பேசிவிட்டனர். ஆனால், மிகப்பெரிய தவறு செய்தவர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட்டில் மட்டும் அல்ல மற்ற விளையாட்டுகளிலும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
இருவரும் மீண்டும் அணிக்கு விரைவில் திரும்ப வேண்டும். ஏனெனில் உலகக் கோப்பை தொடர் நெருங்கிவிட்டது. பாண்ட்யா, ராகுல் இருவரும் திறமை வாய்ந்த வீரர்கள். வெற்றியை தீர்க்கும் வீரர்கள்” என்றார்.
முன்னதாக, பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான நடவடிக்கையை தொடர்ந்து போலி சான்றிதழ் சர்ச்சையில் சிக்கிய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் மீது பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கேள்வி எழுப்பினர். அவர் மட்டும் எப்படி விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் போதே விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று அவர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.