இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றிவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று தொடங்கியது.
கடந்த போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த போட்டியில் அவருக்குப் பதில் துணை கேப்டன் கிரேக் பிராத்வெயிட் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பர்ன்ஸ் 29 ரன்னிலும் ஜென்னிங்ஸ் 8 ரன்னிலும் வெளியேற, அடுத்து வந்த டென்லி 20 ரன்னிலும் கேப்டன் ஜோ ரூட் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி தடுமாறியது. பின்னர் வந்த ஜாஸ் பட்லரும் பென் ஸ்டோக்ஸும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் பொறுமையாக ஆடி, அரைசதம் அடித்தனர்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்துள்ளது. பட்லர் 67 ரன்னுடனும் பென் ஸ்டோக்ஸ் 62 ரன்னு டனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமா பால் 2 விக்கெட்டும் கேப்ரியல், ஜோசப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.