ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. பிப்ரவரி 24 மற்றும் 27ஆம் தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூருவில் இரண்டு இடங்களில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 2, 5, 8, 10, 13 ஆகிய தேதிகள் 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி தேர்வுக் குழு மும்பையில் கூடி ஆலோசிக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் வீரர்கள் மீதான பணிச்சுமை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெறும் அணிதான், மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரும் அணியாக இருக்கும் என்று அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழு தரப்பில் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்தக் கூட்டத்திற்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்படும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா இடம்பெறமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், “விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பும் நிலையில், டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். ஆனால், ஒருநாள் தொடரை பொறுத்தவரை எவ்வித பரிசோதனை முயற்சியும் செய்யப்படாது.
ஒருநாள் தொடருக்கான வீரர்களில் பெரும்பாலானோருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஓய்வு கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் 5 போட்டிகளில் மாறி மாறி களமிறக்கப்படுவார்கள். ஆனால், யாருக்கும் ஓய்வு அளிக்கப்படாது. அணியை விட்டு வெளியேற்றப்படமாட்டார்கள். ஐபிஎல் தொடரின் போது பணிச்சுமை தொடர்பான சிக்கல் ஐபிஎல் தொடரின் போதுதான் சரிசெய்ய வேண்டியுள்ளது.
தற்போது, தோனியை அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான போட்டிதான் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இடையே உள்ளது. அதேபோல், மூன்றாவது தொடக்க வீரர் யார் என்பதற்கான போட்டியும் உள்ளது” என்று கூறியுள்ளார்.