நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த வீரர், திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்தவர் ஹரீஷ் கங்காதரன் (33). இவர் மனைவி நிஷா. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. என்ஜினீயரான ஹரீஷ், நியூசிலாந்தில் பணியாற்றி வந்த நிஷாவை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவரும் நியூசிலாந்து சென்றார். நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு, கிரீன் ஐலேண்ட் கிளப்புக்கு கிரிக்கெட் விளையாடி வந்தார். அந்த அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். அதிகமான இந்தியர்களை கொண்ட அணி அது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்தார். ஆல்ரவுண்டரான ஹரீஷ், இரண்டு ஓவர்கள் பந்துவீசினர். பின்னர், தனக்கு மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்படுவதாகக் கூறி, தரையில் அமர்ந்தார். இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு சங்கனாச்சேரியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது.