உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா வலியுறுத்தியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தத் தொடரில் இடம்பிடிக்க வீரர்கள் இடையே சமீபகாலமாக கடும் போட்டி நிலவி வருகிறது. உலகக் கோப்பைக்கான அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பது குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற வேண்டும் என்று நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார். “ஒரு அணியைப் பொறுத்தவரை பங்களிப்பாளர்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் குறிப்பிட்ட சில வீரர்கள் நிச்சயம் தேவை. ரிஷப் பண்ட் ஒரு பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு மேட்ச் வின்னர். அவர் நிச்சயம் உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்” என்கிறார் நெஹ்ரா.
ரிஷப் பண்ட்டிற்காக நெஹ்ரா அடுக்கும் 5 காரணங்கள்:-
- இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 7 பேர் ஷிகர் தவான் மட்டுமே இடது கை ஆட்டக்காரர். வலது - இடக்கை பேட்ஸ்மேன் கூட்டணி நிச்சயம் தேவை. ரிஷப் பந்த அந்தப் பணியை சிறப்பாக செய்வார்.
- ரிஷப் பண்ட் 1 முதல் 7 வரை பேட்டிங்கில் எந்த வரிசையிலும் ஆடக் கூடியவர். விராட் கோலியும், அணி நிர்வாகமும் அவரை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- ரோகித் சர்மாவுக்கு அடுத்து மிகவும் சாதாரணமாக சிக்ஸர் அடிக்கக் கூடியவர். அதுவும் இக்கட்டான சூழலில் ஹிட் ஷாட் அடிப்பார்.
- இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகிய மூவர் தற்போது மேட்ச் வின்னர்களாக உள்ளனர். அந்த வரிசையில் ரிஷப் பண்ட்டும் மேட்ச் வின்னராக இருப்பார்.
- அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் சிறப்பான வீரர்கள்தான். ஆனால், அணிக்கு ஒரு குறிப்பிட்ட வீரர் நிரந்தரமாக தேவை. அது ரிஷப் பண்ட்தான்.