நியூசிலாந்திற்கு எதிரான 20ஓவர் போட்டியில் கடைசி ஒவரில் தினேஷ் கார்த்திக் ரன் எடுக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20ஓவர் போட்டியில் விளையாடியது. அதில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலிருந்தது. இதனையடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி போராடி 4 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 16 ரன்கள் இலக்காக இருந்தது. அந்த ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும், குருணால் பாண்டியாவும் விளையாடினர். இந்த ஓவரை நியூசிலாந்தின் டிம் சௌத்தி வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் ஓட வாய்ப்பு இருந்தும் ஓடவில்லை. அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இது பெரிய விவாத பொருளாக இருந்து வந்தது.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக், பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர், “என்னால் சிக்சர் அடிக்க முடியும் என்ற நம்பிக்கையிருந்தது. அதனால்தான் அந்தப் பந்தில் ரன் ஓடவில்லை. ஒரு மிடில் ஆட்டக்காரரான என்னால் இதுபோன்ற இக்கட்டான சூழலில் பெரிய அளவிலான ஷாட்டை அடிக்கமுடியும் என்று நம்பினேன். சில நாட்களில் நம்மால் நினைப்பதை செய்ய முடியாது. அவ்வாறுதான் அன்று நடந்தது. மேலும் நான் இதுபோன்ற இக்கட்டான சூழலில் விளையாடிய அனுபவம் உள்ளதால் தான் என் மீது நம்பிக்கை வைத்தேன். இதுகுறித்து அணி நிர்வாகமும் என்னை புரிந்துகொண்டனர்” எனத் தெரிவித்தார்.
இதற்குமுன் கடந்த 2018ல் இலங்கையில் நடந்த 20ஓவர் போட்டியில் தினேஷ் கார்த்திக், கடைசி பந்தில் 6 ரன்கள் தேவையிருந்த நிலையில் சிக்சர் விளாசி இந்திய அணியை த்ரில் வெற்றியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.