இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, வழங்கப்பட்ட பரிசுத் தொகையை, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு விதர்பா அணி கொடுத்தது.
பைஸ் பஸல் தலைமையிலான, நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா மற்றும் ரஹானே தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதிய இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, 330 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்கார மயங்க் அகர்வால் 95 ரன்னும் ஹனுமா விஹாரி 114 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி 425 ரன் குவித்தது. அந்த அணியின் அக்ஷய் கர்னேஸ்வர் 102 ரன் எடுத்தார். இது, இவருக்கு முதல் சதம். ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 வது இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, 3 விக்கெட்டுக்கு 374 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. விஹாரி இந்த இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார்.
பின்னர் விதர்பா அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்தது. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
முதல் இன்னிங்ஸில் எடுத்த முன்னிலையின் அடிப்படையில், விதர்பா அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி தொடர்ந்து 2வது முறையாக இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை, புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு விதர்பா அணி வழங்குவதாக அறிவித்தது.