2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்தத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில், “உலகக் கோப்பையில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடக் கூடாது. பாகிஸ்தான் உடன் விளையாடாமலே உலகக் கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி வலிமையாக உள்ளது” என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “இது மிகவும் இக்கட்டான நேரம். இப்படியொரு தாக்குதல் நடந்ததை நம்பவே முடியவில்லை. இது மிகப்பெரிய தவறு. அரசால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிரிக்கெட் என்று வருகையில், நாம் பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படியில்லை என்றால் தொடர்ந்து அவர்கள் அப்படிதான் நடத்துவார்கள்” என்றார்.
முன்னதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பான்சர் நிதியுதவியை நிறுத்தப்போவதாக ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.