உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா என்பது குறித்து ஐசிசியின் அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று ஏற்கனவே இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இரு நாட்டு தொடர்கள் நடத்தப்படவில்லை. இருந்தாலும் ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்ற கருத்து பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. “பாகிஸ்தானுடன் விளையாடாமலே உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்திய அணி வலிமையாக உள்ளது” என்று இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார்.
அதேபோல், மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடமாட்டோம் என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். இருப்பினும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று அவர் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) காலாண்டு ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 27ம் தேதி தொடங்கி மார்ச் 2 வரை துபாயில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தின் போது பிசிசிஐயிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் பேசுவதற்கும் வாய்ப்புள்ளது.
“இருநாடுகளுக்கு இடையிலான போட்டியை இந்தியா புறக்கணித்தால், பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அதற்கு புள்ளிகள் வழங்கப்படும். ஒருவேளை இறுதிப் போட்டியாக இருந்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், “இந்த விவகாரத்தில் காத்திருந்து முடிவெடுக்கலாம் என்றே பிசிசிஐ எண்ணுகிறது. உலகக் கோப்பை போட்டி குறித்து இப்பொழுதே கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தால், அதன்படி பிசிசிஐ செயல்படும். இதுவரை ஐசிசிக்கு எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை” என்றார்.