ஐ.பி.எல். தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
12 ஆவது ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை, பீல்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணியின் புது வரவான தவன் மற்றும் கலின் இன்ங்ரம் ஆகியோர் சிறப்பாக விளையாடி முறையே 43 மற்றும் 47 ரன்கள் சேர்த்தனர். பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் நாலாபுறமும் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டர்கள் விளாசி 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய மும்பை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் அனுபவ வீரர் யுவராஜ் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கபட்ட ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
அந்த அணி 19புள்ளி 2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டெல்லி அணி தரப்பில் இஷாநத் சர்மா, ரபடா ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்த ரிஷப் பந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
“முதல் போட்டி என்பது எல்லா அணிகளுக்கும் சவாலான ஒன்றுதான். நிறைய புது வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். நாங்கள் நிறைய தவறு செய்துவிட்டோம். நாங்கள் பந்துவீசும் போது முதல் 10 ஓவர் சிறப்பானதாக இருந்தது. ஆனால், ரிஷப் பண்ட்டின் பேட்டிங் சிறப்பாக அமைந்துவிட்டது. அதனால், பந்துவீச்சில் எங்கள் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. நாங்கள் அனைவரும் சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள். தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அடுத்தப் போட்டியில் உற்சாகத்துடன் திரும்புவோம். ஆடுகளத்தை கணித்ததுதான் சுழற்பந்துவீச்சாளரை எடுக்கவில்லை. டெல்லி அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால், லெக் ஸ்பின்னர்களை எடுக்கவில்லை. சுழற்பந்துவீச்சாளர்களால் 4 ஓவர்களை வீச முடியும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்தப் போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும். யுவராஜ் நன்றாக பேட்டிங் செய்தார். முதல் 4 பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் 70-80 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும்” என்று கூறினார்.