தங்கள் வீட்டு பிள்ளைகளிடம் செல்ஃபி எடுக்க வேண்டுமென தோனியை காவல் துறை அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்திய அணியைப் பொறுத்தவரை அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர் தோனி. இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக இவர் விளையாடுவதால், தமிழகத்தில் இவருக்கு கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்கள். கேப்டன் கூல், மஹி, எம்எஸ்டி என்று நிறைய செல்லப்பெயர்கள் இருந்தாலும் தமிழகத்தை பொருத்தவரை தோனியின் செல்லப்பெயர் 'தல'.
தலயும் 'சென்னை என் இரண்டாவது வீடு' என்று கூறி தனது பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தோனியின் மீதுள்ள பாசத்தில் ரசிகர்கள் பலமுறை மைதானத்திற்குள்ளே நுழைந்து அவரது காலை தொட்டு வணங்கி சென்றிருக்கிறார்கள். போட்டோ எடுத்துக்கொள்வதற்காக மைதானத்தில் நுழையும் ரசிகர்களுடன் ஓட்டப்பந்தயத்தில் தோனி ஈடுபடும் சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த தோனி, நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக உள்ள சில காவல் துறை அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து டோனியுடன் செல்ஃபி எடுக்க முயல்வதாக கூறப்படுகிறது.
இதனால் தோனியின் தனி சுதந்திரம் பாதிக்கப்படுவதாக, சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி, இணை ஆணையர் மகேஸ்வரியை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், புகார் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக அதிகாரபூர்வமாக எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.