பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கெயில், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கெயில் அதிரடியாக விளையாட, ராகுல் மிகவும் நிதானமாக ஆடினார். கெயில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்த களமிறங்கிய அகர்வாலும் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கே.எல்.ராகுல் தொடர்ந்து நிதனாமாக ஆடினர். பின்னர், மில்லரும், கே.எல்.ரகுலும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன் சேர்ந்தனர். கே.எல்.ராகுல் 47 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல், மில்லர் 40 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில், பூரான் 5, மந்தீப் சிங் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். கடைசியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.
பின்னர் 183 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் - ராகுல் திரிபாதி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணி 97 ரன்களை கடந்த போது அஸ்வின் பந்து வீச்சில் சாம்சன் ஆட்டமிழந்தார். பின்னர் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
அடுத்தடுத்த விக்கெட்டுகளால் ராஜஸ்தான் அணி தடுமாறியது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டது. ஆனால் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது 5வது வெற்றியை பதிவு செய்தது.