உலகக் கோப்பை தொடரில் தனக்கு பதிலாக விஜய்சங்கருக்கு வாய்ப்பு அளித்தது குறித்து அம்பத்தி ராயுடு கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
2019 உலகக் கோப்பை தொடருக்கான கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமத் ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி அறிவிப்பில் அனுபவ வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் எடுக்கப்பட்டுள்ளார். விஜய் சங்கர் தேர்வு குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், “ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் தன்மையை கணக்கில் கொண்டு இந்தத் தேர்வு நடைபெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு நான்காவது இடத்திற்கு நிறைய வீரர்களை முயற்சித்து பார்த்தோம். அம்பத்தி ராயுடுவிற்கு சில வாய்ப்புகளை வழங்கினோம். நான்காவது இடத்திற்கு விஜய்சங்கர் பெயர் ஆலோசிக்கப்பட்டது. விஜய் சங்கர் ஆல்ரவுண்டராக பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தமக்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து அம்பத்தி ராயுடு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது, “உலகக் கோப்பையை பார்க்க 3டி கண்ணாடிகள் வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்சங்கர் தேர்வு குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் பேசுகையில் மூன்று பரிணாமங்களில், அதாவது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.
முன்னதாக, உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவிற்கு இடம் கிடைக்காதது குறித்து ஐசிசி கேள்வி எழுப்பி இருந்தது. இதுகுறித்து ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அதிகமான பேட்டிங் சராசரியில் விராட் கோலி (59.57), தோனி (50.37), ரோகித் சர்மா (47.39) ஆகியோருக்கு அடுத்தபடியாக அம்பத்தி ராயுடு (47.05) நான்காவது இடத்தில் இருக்கிறார் என்ற தகவலை குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், “உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறவில்லை. அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது சரியென நினைக்கிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.