உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் காத்திருப்பு பட்டியலிலுள்ள வீரர்கள் யார்? யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் ரிஷப் பந்த் மற்றும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படவில்லை. இரண்டாவது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் காத்திருப்பு பட்டியலிலுள்ள வீரர்கள் யார்? யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு காத்திருப்பு வீரர்கள் வைத்திருந்ததை போல் உலகக் கோப்பைக்கும் முன்று காத்திருப்பு வீரர்கள் உள்ளனர். ரிஷப் பந்த், அம்பத்தி ராயுடு மற்றும் நவ்தீப் சாய்னி ஆகியோரே அவர்கள். உலகக் கோப்பை அணியில் இருக்கும் வீரர்கள் யாருக்குவாது காயம் ஏற்பட்டால் இவர்களில் ஒருவர் அனுப்பப்படுவார்கள்.
அத்துடன் கலீல் அகமது, அவேஷ் கான் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு பந்து வீச்சாளர்களாக செல்லவுள்ளனர். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் மே 12ஆம் தேதிதான் நிறைவடையவுள்ளதால், உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சற்று ஓய்வு நேரம் தேவைப்படுவதால் இச்சோதனை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு” எனக் கூறியுள்ளார். ஆனால் இந்தத் தகவல் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வமானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.