மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. ராஜஸ்தான் அணிக்கு ரகானேவுக்கு பதில் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டி காக் 65 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 34, ஹர்திக் பாண்ட்யா 10 ரன்கள் எடுத்தனர். கோபால் இரண்டு விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து 162 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரகானே 12 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ஸ்மித், சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சாம்சன் 19 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
பின்னர் வந்த பராக் அதிரடியாக விளையாடினார். அவர் 29 பந்தில் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதியில் 19.1 ஓவரில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் சாஹர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
10 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி தன்னுடைய 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.