பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் 19-வது ஓவரில் ஏன் சிங்கிள் எடுக்கவில்லை என்பது குறித்து தோனி மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. அந்தப் போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியின் 19-வது ஓவரை நவ்தீப் சாய்னி வீசினார். அப்போது சென்னை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை அணி சார்பில் தோனி மற்றும் பிராவோ களத்தில் இருந்தனர்.
அந்த ஓவரில் தோனி மூன்று சிங்கிள் எடுக்கும் வாய்ப்பை மறுத்தார். இதனையடுத்து அந்த ஓவரில் சென்னை அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ் முதல் ஐந்து பந்துகளில் 4,6,6,2,6 என மொத்தம் 24 ரன்கள் கொடுத்தார். கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தாகூர் ரன் அவுட் ஆனதால் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் 19வது ஓவரில் சிங்கிள் எடுக்காததற்கு தோனி விளக்கமளித்துள்ளார். அதில் “ஆட்டத்தின் கடைசி கட்டம் மிகவும் கடினமாக இருந்தது. மேலும் பந்துவீச்சாளர்கள் சற்று கடினமான முறையில் பந்துவீசி வந்தனர். இதனால் பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை. அதுமட்டுமில்லாமல் ஆடுகளம் புதிதாக களமிறங்கியவர்களுக்கு அதிக சவாலாக அமையும் என கருதியதால், சிங்கிள் வேண்டாம் என நினைத்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.