டெல்லி அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரின் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஜெய்ப்பூரில் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ரன் அவுட் ஆனார். மற்றொரு ஆட்டக்காரரான ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தார். 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் விக்கெட்டை பறிகொடுத்தார். நிலைத்து விளையாடிய ரஹானே, 58 பந்தில் சதம் அடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் அவர் அடித்த இரண்டாவது சதம் இது.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஹானே 105 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி, 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தவான் 27 பந்தில் 54 ரன்னும் பிருத்வி ஷா 42 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரிஷாப் பன்ட், 36 பந்துகளில் 78 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 11-வது போட்டியில் ஆடிய டெல்லி அணிக்கு இது 7-வது வெற்றி.