ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ஹைதராபாத் அணியில் வில்லியம்சன் தாயகம் திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் கேப்டனாக செயல்படுகிறார்.
கடந்த முறை ஹைதராபாத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோனி விளையாடவில்லை. தோனிக்கு பதிலாக ரெய்னா தலைமையில் சிஎஸ்கே விளையாடியது. ஆனால், மோசமான தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் வாட்சன் 31(29), டு பிளிசிஸ் 45(31) எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் வரை எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்து வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், சன்ரைசர்ஸ் அணி 16.5 ஓவர்களிலே வெற்றி பெற்றது. வார்னர், பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் தோனி களமிறங்குகிறார். சென்னை அணியில் முன்கள வீரர்களில் பேட்டிங் சொதப்பலாகவே இருந்து வருகிறது. தொடர்ச்சியாக எந்தவீரரும் அடிப்பதில்லை. பந்துவீச்சில் சாஹர், இம்ரான் தஹிர் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
ஹைதராபாத் அணியில் வார்னர், பேரிஸ்டோவ் தொடர்ச்சியாக மிரட்டி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு பின்னால் இறங்கும் வீரர்கள் பெரிய அளவில் பங்களிப்பு செலுத்துவதில்லை. பந்துவீச்சில் கலீல் அஹமது, ரஷித் கான் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.