மகேந்திர சிங் தோனியை போல் இந்திய கிரிக்கெட் அணிக்கு பங்களிப்பு செலுத்திய வீரர் யாருமில்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு தொடங்கியது முதல் தோனிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பிறகும் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக மிரட்டி வருகிறார். இருப்பினும், கடந்த ஆண்டு அவருக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. அவர், உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவது குறித்தே விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தோனியின் ஆட்டத்திறன் குறித்து அவரை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ளார். “தோனியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார். அவர் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது.
அதேபோல்தான், அவரது உடல்தகுதி எவ்வளவு காலம் ஒத்துழைக்கும் என்பதும். ஆனால், தோனியைப் போல் இந்திய அணிக்கு பங்களிப்பு செலுத்தியவர் யாருமில்லை. நாம் அவரை மதிக்க வேண்டும். அதோடு, வாழ்த்தவும் வேண்டும். இந்த உலகக் கோப்பையையும் அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.
அதேபோல் தற்போதையை இந்திய அணி குறித்து கூறுகையில், “தற்போதைய இந்திய அணி சிறப்பாகவே உள்ளது. இருப்பினும், உலகக் கோப்பை அவ்வளவு எளிதாக இருக்காது. ஒரு அணியாக செயல்பட்டு அவர்கள் விளையாட வேண்டும். அவர்களுக்கு தற்போதைக்கு காயம் ஏதுமில்லை என்று நம்புகிறேன்” என்றார்.
ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளது குறித்து, “தேர்வு குழுவினர் தங்களது பணியை செய்துள்ளார்கள். நாம் அதனை மதிக்க வேண்டும். பண்டிற்கு பதிலாக அவர்கள் தினேஷ் கார்த்திக்கை எடுத்துள்ளார்கள். அப்படியெனில் அது சரியாகத்தான் இருக்கும். நாம் தேர்வாளர்களின் சிறந்த பணியை நம்ப வேண்டும்” என்று கபில் தேவ் கூறினார்.