டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு கங்குலி மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரே காரணம் என்று பிருத்வி ஷா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணி பெரும்பாலன சீசன்களில் புள்ளிப்பட்டியலில் கீழே தான் இருந்துள்ளது. அதாவது இதுவரை நடைபெற்ற 11ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 4 முறை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. குறிப்பாக 2008,2009 மற்றும் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் மட்டுமே பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறியது. மற்ற ஐபிஎல் தொடர்கள் அனைத்திலும் டெல்லி அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடுவதில்லை என்ற எண்ணம் மேலோங்கியிருந்து.
இந்த தரவுகளுக்கு எல்லாம் மாறாக இந்தாண்டு டெல்லி அணி புது உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. இந்தாண்டு அந்த அணி தனது பெயரை ‘டெல்லி கேபிடல்ஸ்’ என மாற்றியது மட்டுமில்லாமல் தனது ஆட்டத்தின் பாணியையும் மாற்றியுள்ளது. அதன் விளைவு நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இதுவரை 11 போட்டியில் விளையாடியுள்ள டெல்லி அணி 7ல் வெற்றிப் பெற்று 14 புள்ளிகளுடன் உள்ளது. இதனால் இம்முறை இந்த அணி பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது.
டெல்லி அணியின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர், “நாங்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட காரணம் பாண்டிங், கங்குலி மற்றும் கைஃப் ஆகியோர்கள் தான். அணியின் பயிற்சியாளரான பாண்டிங் மற்றும் துணை பயிற்சியாளர் கைஃப் ஆலோசனையாளர் கங்குலி ஆகியோர் டெல்லி அணியை சீராக கட்டமைத்துள்ளனர். அவர்கள் என்னைப் போன்ற அனுபவமில்லாத வீரர்களையும் இவர்கள் சிறப்பாக கையாள்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக கங்குலி அணியின் பயிற்சியில்லாத போது எங்களை வெளியில் சாப்பிட அழைத்து செல்வார். இதனால் எங்களுக்கு அவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டது. அத்துடன் அணியிலும் நல்ல ஒற்றுமை உண்டானது” எனத் தெரிவித்துள்ளார்.