இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சுக்கு பின்னால் ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி வாகை சூடியது. மும்பை அணியில் அதிகம் கவனம் பெற்ற வீரராக இருந்தவர் பந்துவீச்சாளர் பும்ரா. பல போட்டிகளில் இவரின் பங்களிப்பு மும்பைக்கு வெற்றியை தேடித்தந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ராவின் பந்துவீச்சு என்றால் மறுப்பதற்கு இல்லை.
சென்னை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் பும்ரா. மும்பை அணியின் கேப்டன் ரோஹித்தும் பும்ரா எங்கள் சொத்து என பாராட்டு தெரிவித்திருந்தார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் , தான் இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார். உலக கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் கூட பும்ராவின் பந்துவீச்சு கவனம் கொள்ளவைக்கிறது.
ஐபிஎல் மட்டுமில்லை, எதிர்வரும் உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் முக்கிய நட்சத்திரமாக பும்ரா பார்க்கப்படுகிறார். டெத் பவுலரான பும்ரா உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் பும்ராவின் பந்துவீச்சுக்கு பின்னால் ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமன்பாடுகளை கூறியும் விளக்கம் அளித்துள்ளார்.
பும்ரா வீசும் பந்தின் வேகம், அப்போது அவரின் உடல் வடிவ நிலை, பந்து சுழலும் விதம் எல்லாம் சேர்ந்து மேக்னஸ் விளைவு ஏற்படுகிறது. இதன் மூலம் பும்ரா வீசும் பந்தின் கீழ்நோக்கிய விசை துல்லியமாக முடுக்கிவிடப்பட்டு பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துகிறது. திடீர் பவுன்ஸ் ஏற்படவும் இதுவே காரணம் என விளக்கம் தெரிவித்துள்ளார்.