பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வந்தது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் மற்ற மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேம்ஸ் வின்ஸ்- பேர்ஸ் டோவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தது. வின்ஸ் 33 ரன்னிலும் பேர்ஸ்டோவ் 21 பந்தில் 32 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் கேப்டன் மோர்கனும் அதிரடியில் ஈடுபட்டனர். 64 பந்தில் 76 ரன் எடுத்த நிலையில் மோர்கன் ஆட்டமிழந் தார். ஜோ ரூட் 73 பந்தில் 84 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த பட்லர் 34, பென் ஸ்டோக்ஸ் 21, ஆல்ரவுண்டர் டாம் கர்ரன் 15 பந்தில் 29 ரன் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 351 ரன் குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் ஷா அப்ரிதி 4 விக்கெட்டுகளையும், இமாத் வாசிம் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் பஹர் ஜமான் ரன் ஏதும் எடுக்காமலும் அபித் அலி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அனுபவ வீரர் முகமது ஹபீஸும் டக் அவுட் ஆக, 6 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறத் தொடங்கியது. ஆனால், பாபர் ஆஸமும் கேப்டன் சர்பிராஸ் அகமதுவும் இணைந்து, அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் விளையாடியதை பார்க்கும்போது பாகிஸ்தான் அணி வென்றுவிடும் என்ற நிலையே இருந்தது. ஆனால், பாபர் 80 ரன்னி லும் சர்பிராஸ் 97 ரன்னிலும் ரன் அவுட் ஆக, அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைக்கவில்லை.
இதனால் அந்த அணி 46.5 ஓவர்களில் 297 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டு களை அள்ளினார். ரஷித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது கிறிஸ் வோக்ஸுக்கும் தொடர் நாயகன் விருது ஜேசன் ராய்-க்கும் வழங்கப்பட்டது.