இரட்டை சதம் பற்றி தான் யோசிக்கவில்லை என்றாலும் தான் ஆட்டமிழந்த விதம் ஏமாற்றமாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
உலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77,
கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
விருதை பெற்ற பின் அவர் பேசும்போது, ‘’ ஓர் அணியாக நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. நியூசிலாந்து அணியுடனான போட்டி மழையால் ரத்தானதால் வெறுப்பில் இருந்தோம். அதனால் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆட முடிவு செய்தோம். இந்தப் போட்டியில் நான் ஆட்டமிழந்த விதம், வருத்தமாக இருந்தது. நீங்கள் நிலையாக நின்றுவிட்டால், எவ்வளவு ரன் குவிக்க முடியுமோ, அவ்வளவு ரன் குவிக்க வேண்டும். இந்த பிட்ச் அருமையாக இருந்ததால், கடைசிவரை நின்று ஆட நினைத்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்துவிட்டேன். அந்த பந்தை தவறாக கணித்ததால் ஆட்டமிழந்தேன். இரட்டை சதம் அடிக்க நினைத்தீர்களா என்று கேட்கிறார்கள். நம்புங்கள், நான் இரட்டை சதம் பற்றி யோசிக்கவே இல்லை. என்னுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடினார்’’ என்றார்.