ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி எங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் செய்துவிட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது தெரிவித்தார்.
உலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77,
கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.
தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது, ‘’பந்துவீச்சை தேர்வு செய்தது தவறில்லை’’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘’டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சரியான முடிவுதான். ஆனால், எங்கள் பந்துவீச்சாளர்கள் சரியான பகுதியில் பந்துவீசவில்லை. ரோகித் சர்மாவை எப்படி ஆட்டமிழக்க வைக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். அதை சரியாக செயல்படுத்தவில்லை. ஈரப்பதம் காரணமாக இரண்டு ஸ்பின்னர்களை அணியில் சேர்த்திருந்தோம். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் அவர்களை சிறப்பாக எதிர்கொண்டார்கள். இந்திய வீரர்களின் பந்துவீச்சும் நன்றாக இருந்தது.
எங்கள் அணியின் பேட்டிங்கும் அருமையாகவே தொடங்கியது. ஆனால், மிடிலில், 3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிட்டோம். அதுதான் தோல்விக்கு காரணமாகிவிட்டது. இந்த தோல்வி எங்களை மேலும் கடுமையாக்கி உள்ளது. அடுத்து எங்களுக்கு இருக்கிற நான்கு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்’’ என்றார்.