’டாஸ் வென்றிருந்தால், பாகிஸ்தான் கேப்டன் செய்திருந்ததைதான் நானும் செய்திருப்பேன்’ என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.
உலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.
வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ’’ இந்த பிட்ச் எந்த வித்தியாசத்தை யும் தரவில்லை. நான் டாஸ் வென்றிருந்தாலும் பந்துவீச்சைதான் தேர்வு செய்திருப்பேன். இந்த பிட்சில் இரண்டாம் பாதியில்தான் பந்து நன்றாகத் திரும்பியது. சரியான பகுதியில் பந்து வீசியிருந்தால் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியும். ரோகித் சர்மா கடந்தப் போட்டியில் தனியாக நின்று வெற்றி பெற வைத்தார். இந்தப் போட்டியில் அவரும், கே.எல்.ராகுலும் தாங்கள் சிறந்த வீரர்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள். குல்தீப் யாதவ் புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர். பாபர் ஆஸமை ஆட்டமிழக்க அவர் வீசிய பந்து அருமையானது. உலகக் கோப்பையில் இதுதான் அவரது சிறப்பான பந்துவீச்சு.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்தப் போட்டியில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஆடினால், விஷயங்கள் தவறாகப் போகக் கூடும். அந்தப் பார்வையோடு நாங்கள் அவர்களை அணுக மாட்டோம். விளையாட்டை விளையாட்டாகவே பார்த்தோம். அதனால்தான் வெல்ல முடிந்தது’’ என்றார்.