உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. அந்த அணியில் இமாம் உல் ஹாக், ஃபகர் ஜமான் களமிறங்கினர். இமாம் 7 ரன்னில் விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால், அவரது ஓவரில் மீதமிருந்த இரண்டு பந்துகளை வீச விஜய் அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலே அந்த விக்கெட்டை எடுத்தார்.
இதனையடுத்து, ஃபகர் ஜமான், பாபர் அசாம் ஜோடி நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். இவர்கள் விக்கெட் விளாமல் பார்த்துக் கொண்டனர். ஃபகர் 59 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 21.4 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இதனால், பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி செல்வதாக தோன்றியது.
பின்னர், குல்தீவ் யாதவ் தான் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் எடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். முதலில் 48 ரன்கள் எடுத்த நிலையில் அசாமை ஆட்டமிழக்க செய்தார். அது அருமையான போல்ட் விக்கெட். பின்னர், அதிரடியாக விளையாட தொடங்கிய ஃபகர் ஜமானை 62 ரன்னில் அவுட் ஆக்கினார். இதனால், இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.
குல்தீவ் யாதவை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து இரண்டு விக்கெட் சாய்த்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தார். முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். 27 ஓவரில் பாகிஸ்தான் அணி 129 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. சர்பராஸ் அகமதுவும் 12 ரன்னில் விஜய் சங்கர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டக்வெர்த் முறைப்படி பாகிஸ்தான் அணி இந்தியாவை விட 86 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஒருவேளை போட்டி கைவிடப்பட்டால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.