விராட் கோலியின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போதைய கோலி படத்துடன் ஒப்பிட்டு வைரலாக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 22வது போட்டி நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா அபார சதம் (140) விளாசினார். கேப்டன் கோலி 77 (65) ரன்களை குவித்தார்.
இதையடுத்து 337 என்ற கடினமான இலக்கை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணி தொடக்க விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் ஃபாகர் மற்றும் பாபர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஃபாகர் 62 (75) மற்றும் பாபர் 48 (57) ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மழை தூறும் போது, விராட் கோலி தனது இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு யதார்த்தமாக விண்ணை நோக்கி பார்ப்பார். இந்தப் படத்தை விராட் கோலி சிறுவயதில் இடுப்பில் கைகளை வைத்துகொண்டு பார்க்கும் புகைப்படத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். வைரலான இந்தப் புகைப்படம், விராட் கோலியின் பார்வை வரை சென்றுவிட்டது. இதையடுத்து அப்புகைப்பட ஒப்பீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, ‘90-களின் தொடக்கத்திலிருந்து தான் இவ்வாறு செய்வதாக’ நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.