பாகிஸ்தான் பேஸ்ட்மேன்களுக்கு என்ன அறிவுரை வழங்க விரும்புகிறீர்கள் என இந்திய வீரர் ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் மூன்றாவது வெற்றியை பெற உறுதுணையாக இருந்தார் ரோகித் சர்மா.
உலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மாவிடம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பாகிஸ்தான் பயிற்சியாளராக மாறினால் கண்டிப்பாக அறிவுரை வழங்குவேன் என நகைச்சுவையுடன் பதிலளித்தார்.