இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது மைதானத்தில் கொட்டாவி விட்டதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22வது லீக் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் ராகுல் சிறந்த பேட்டிங்கை பதிவு செய்தனர். ராகுல் விக்கெட்டை தொடர்ந்து விளையாடிய ரோகித் சதம் அடித்து அசத்த மறுமுனையில் விராட் விளாசினார்.
இதனால் 46.4 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்களை குவித்தது. ஆனால் ரசிகர்கள் பயந்தது போலவே மழை குறுக்கிட்டது. இதனால் ரசிகர்கள் சற்று சலிப்படைந்தனர். சிறிது நேரம் பெய்த மழை பின்னர் நின்றுவிட்டது. அதன்பின்னர் மைதானத்தை தயார் செய்து மீண்டும் போட்டி தொடங்கியது. அப்போது பாகிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பராக அந்த அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது நின்றார்.
போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் அவர் கொட்டாவி விட்டார். இது அங்கிருந்த கேமராக்களில் தெளிவாக பதிவாகியது. மேலும் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதற்கு தற்போது நெட்டிசன்கள் தங்களது வலைதளப்பக்கத்தில் கலாய்த்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் “சர்பராஸ் கொட்டாவி விடுவதை பார்த்தால் நான் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அலுவலகத்தில் கொட்டாவி விடுவதை நினைவு படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் சிலருடைய பதிவுகளை இங்கே காணலாம்.
முன்னதாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி மழை குறுக்கிட்டதால் டக்வெர்த் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால் 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.