பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது, இந்திய வீரர்கள் சில வாய்ப்புகளை வழங்கியும் அதை அந்த அணி, பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77,
கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில், பாகிஸ்தானுக்கு சாதகமாக சில விஷயங்கள் நடந்தன. ஆனால், அந்த அணி அதை கோட்டை விட்டுவிட்டது.
முதலில் பேட் செய்த இந்திய அணியில், ரோகித் சர்மா, 9.1 வது ஓவரில், 32 ரன்னில் இருந்தபோது, எளிதான ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 47 ஆக இருந்தது. அவர் ஆட்டமிழந்திருந்தால் அணியின் போக்கு மாறியிருக்கும். இதே போல மற்றொரு ரன் அவுட்டில் இருந்தும் அவர் தப்பினார். இதையடுத்தே அவர் 140 ரன் விளாசினார்.
இதற்கிடையே, விராத் கோலி 47.4 வது ஓவரில், முகமது ஆமீர் வீசிய பந்தை அடிக்க முயன்றார். அது பேட்டில் படாமல் கீப்பரிடம் சென்றது. ஆமீர், அவுட் கேட்க, நடுவர் எதுவும் சொல்லாமல் இருக்கும்போது, விராத் கோலி அவுட் என நினைத்து பெவிலியன் திரும்பினார். ஆனால், ரீபிளேவில் பந்துக்கும் பேட்டிற்கும் இடைவெளி இருப்பது நன்றாக தெரிந்தது.
இந்த வாய்ப்புகளை பாகிஸ்தான் அணி சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.