பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுரையை கேட்காததால் அந்த அணி தோல்வி அடைந்தது என்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு முன், பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் ட்விட்டரில், “ இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுக்குமே மன அழுத்தம் இருக்கும். மன வலிமை அதிகமாக இருக்கும் அணியே வெற்றி பெறும். நாங்கள் தைரியமான கேப்டனையே கொண்டிருக்கிறோம். அவர் இன்று துணிச்சலுடன் இருக்க வேண்டும்.
மனதில் இருக்கும் பயத்தை வெளியேற்றிவிட்டு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தோற்றுவிடுவோமோ என்கிற பயமே எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடும். இதுவே பாகிஸ்தான் அணிக்கு நான் அளிக்கும் அறிவுரை’’ என்று கூறியிருந்தார். அவர் மேலும், ’’பிட்சில் ஈரப்பதம் இல்லாத நிலையில் டாஸ் வென்றால், முதலில் பேட்டிங் கை தேர்வு செய்யுங்கள்’’ என்றும் கூறியிருந்தார்.
ஆனால், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபிராஸ் அகமது, பந்துவீச்சையே முதலில் தேர்வு செய்தார். போதாதா, ட்விட்டர்வாசி களுக்கு? பிரதமரின் பேச்சை கேட்காததாலேயே அந்த அணி தோற்றது என்று சமூக வலைத் தளங்களில், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபிராஸ் அகமதுவை வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர்.