தன்னை வசைபாடிய ரசிகர்களிடம் கைதட்டும்படி கூறிய விராத் கோலியின் செயல் பாராட்டுக்குரியது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில், விராத் கோலி களத்தில் இருக்கும் போது மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள், கோலிக்கு ஆதரவாகவும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித்தை சிறுமைப்படுத்தும் வகையில் ’ஏமாற்றுக்காரர்’ என்றும் கூச்சலிட்டனர்.
இதைக் கவனித்த இந்திய கேப்டன் விராத் கோலி, ரசிகர்களை பார்த்து, ஸ்மித்தை கைத்தட்டி உற்காசப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். கோலியின் இச்செயலைக் கண்ட ஸ்மித், அவரை தட்டிக் கொடுத்து நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த விராட் கோலி, ''என்றோ ஏதோ நடந்துவிட்டது. ஸ்மித் மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டார். அவர் அணிக்காக சிறப்பாக விளையாடுகிறார். பழைய கதைகளை கிளறி அவரை மீண்டும் சிறுமைப்படுத்தக் கூடாது. அது தவறு'' என தெரிவித்தார்.
கேப்டன் விராத் கோலியின் வீடியோவை சமூகவலைதளங்களில் பலர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து பாராட்டினர். இந்நிலையில் இதுபற்றி கருத்துத் தெரிவிக்காமல் இருந்த ஸ்மித், இப்போது விராத் கோலியை பாராட்டியுள்ளார்.
அவர் கூறும்போது, ‘’மைதானத்தில் இருந்து ரசிகர்கள் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலையில்லை. அது என்னை பாதிக்காது. அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இருந்தாலும் விராத் கோலியின் செயல் அருமையானது, வரவேற்கத்தக்கது’’ என்று பாராட்டு தெரிவித்தார்.