உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை, எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், மான்செஸ்டரில் இன்று நடக்கும் 24-வது லீக் போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்தியது. ஆனால், பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அந்த அணி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் கேப்டன் இயான் மோர்கனும் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராயும் காயம் காரணமாக பாதியில் வெளியேறினர். இதில் ஜேசன் ராய், காயம் குணமடையாததால் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்கன் அணிக்கு திரும்பியுள்ளார். வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணி இன்று செயல்படும்.
ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்து, இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடுவதில்லை. முகமது நபி, ரஷித் கான் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்கள் ஏதாவது மேஜிக் நிகழ்த்தினால் மட்டுமே பல வாய்ந்த இங்கிலாந்து அணியை வெல்ல முடியும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 2015ஆம் ஆண்டு நடந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.