வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில், இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. டி-20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முன்னதாக 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார்.
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. மயங்க் அகர்வால் 12 ரன்னிலும், கே.எல்.ராகுல் 36 ரன்களிலும் ரஹானே ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் புஜாராவும் ரோகித் சர்மாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விஹாரி வந்தார். அவரும் புஜாராவும் நிதானமாக ஆடினார்.
சிறப்பாக ஆடிய புஜாரா சதம் அடித்து, ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் 33 ரன்களில் ஆட்டமிழக்க, நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது. விஹாரி 37 ரன்களுடனும் ஜடேஜா ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது.