இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. டி-20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.
இந்நிலையில், அங்கிருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக, தங்களுக்கு இ-மெயில் வந்துள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எந்த பயங்கரவாத இயக்கத்தின் பெயரும் இல்லாமல் இந்த மிரட்டல் மெயில் வந்துள்ளது என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அந்த மெயிலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அங்கிருந்து, அந்த மெயில் பகிரப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி கூறும்போது, ‘’அந்த மிரட்டல் தகவல் உண்மை தான். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்குத் தெரிவித்துள்ளோம். மும்பை போலீஸுக்கும் கூறியுள்ளோம். ஆண்டி குவாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தகவல் அனுப்பியுள்ளதை அடுத்து இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது’’ என்றார்.