வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் வேகத்தில் அந்த அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. டி-20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆண்டிகுவாவில் நடந்து வருகிறது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார்.
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. மயங்க் அகர்வால் 12 ரன்னிலும், கே.எல்.ராகுல் 36 ரன்களிலும் ரஹானே ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் புஜாராவும் ரோகித் சர்மாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விஹாரி வந்தார். அவரும் புஜாராவும் நிதானமாக ஆடினார்.
சிறப்பாக ஆடிய புஜாரா சதம் அடித்து, வெளியேறினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 56.1 ஓவரில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக ஹோட்ஜ் 51 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 2 வது இன்னிங்ஸை தொடங்கிய, இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 20 ரன்களுடனும் விஹாரி 48 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.