தடைக்காலம் முடிந்த பின்னர் முதலில் உள்ளூர் போட்டிகளில் ஸ்ரீசாந்த் விளையாட வேண்டுமென வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை, உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி நீக்கியது. அத்துடன் ஸ்ரீசாந்திற்கு எவ்வளவு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பிசிசிஐ விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின், மூன்று மாதத்திற்குள் முடிவு செய்வார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, ஸ்ரீசாந்திற்கான தண்டனை 7 ஆண்டுகள் என நீதிபதி டி.கே.ஜெயின் நேற்று தெரிவித்தார். அத்துடன், அடுத்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் அவர் மீதான தடை முடிவுக்கு வரும் என அவர் கூறினார்.
அதனையடுத்து, மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்த ஸ்ரீசந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே தன்னுடைய வாழ்நாள் லட்சியம் எனவும் கூறினார். இது குறித்து பேசிய ஸ்ரீசாந்த், “இந்த வரும் எனக்கு 36 வயது. அடுத்த வரும் 37 வயதாகியிருக்கும். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 87 விக்கெட் எடுத்துள்ளேன். 100 டெஸ்ட் விக்கெட் எடுப்பதே எனது லட்சியம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்புவேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது. விராட் கோலி தலைமையில் விளையாட எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு” என்றார்.
இந்நிலையில், தடைக்காலம் முடிந்து கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்பியவுடன் ஸ்ரீசாந்த் முதலில் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். அப்போது, பாகிஸ்தான் வீரர் ஆமிர் கான் இதேபோல் தடைக்காலம் முடிந்து நேரடியாக சர்வதேச போட்டிகளில் விளையாடியதை குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சேவாக், பாகிஸ்தானில் எதுவும் நடக்கலாம் என அவர் கூறினார்.