புதிய அத்தியாயத்தை உருவாக்கிய உசேன் போல்ட் இன்று தனது 33 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
வரலாற்றை மாற்றி எழுதிய போல்ட் புயல் உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசேன் போல்ட் 1986 ஆம் ஆண்டு ஜமைக்காவில் பிறந்தார். உலகம் வியந்து பார்க்கும் உச்சபட்ச சாதனைகள் பலவற்றை படைத்தவர்தான் இந்த மின்னல் வேக ஓட்டக்காரர். பத்து வினாடிக்குள் 100 மீட்டர் பந்தயத் தூரத்தைக் கடக்க பகலிரவாக இவர் மேற்கொண்ட பயிற்சிகள் பல.
ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதே பலருக்கும் எட்டாக்கனியாக இருக்க, இவரோ எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று ஓலிம்பிக் போட்டிகளில் தங்கத்தை தட்டி சென்ற ஒரே வீரரும் இவர்தான்.
2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்திலும் முதலிடம் பிடித்து தனது நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். 2009ல் பெர்லினில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனைப் படைத்தார் உசைன் போல்ட். 10 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இன்று வரை இச்சாதனை எவராலும் முறியடிக்கப்படவில்லை. 11 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற போல்ட்டை அதிவேக ஓட்டத்தின் அகராதி என்றால் எவரும் மறுக்க மாட்டார்கள்.
2017 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகு ஓட்டத்திலிருந்து ஒய்வு பெற்ற போல்ட், சிறிது காலம் கால்பந்து விளையாட்டின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். ஓட்டப்பந்தயத்தில் புதிய வரலாற்றை படைத்த இந்தப் புயல், கரை கடந்தாலும், அதன் சுவடுகள் காலத்திற்கும் அழியாமல் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.